nanrasithathu.blogspot.com

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

காமம் போற்றும் பெண் கவிஞர்கள்



"எல்லா வித அறிதல்களோடு விரிகிறது என் யோனி" என்று ஒரு கவிதை வரி மூலம் இலக்கிய உலகை அதிர வைத்தார் பெண் கவிஞர் சல்மா.

தனது கவிதை நூலுக்கு "முலைகள்" என்று தலைப்பு வைத்து கவனம் எழுத்துலகில் கவனம் பெற்றார் மற்றொரு பெண் கவிஞரான குட்டி ரேவதி.

இவர்களை போன்று, கவிஞர் அனார் மற்றும் கவிஞர் மாலதி மைத்ரேயி ஆகியோர் துணிச்சலுடன் பெண்களின் காமத்தை தங்களின் கவிதைகள் மூலம் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் சமிபத்தில் நான் படித்த இரண்டு கவிதைகளை இங்கே தருகிறேன்.

பெண் சிலந்திப்பூச்சியின் வீடு

ஒவ்வொரு கால்களிலும்
காமம் நடன ஊற்றாகி
கொடுக்கில் விசம் ஏற்றி . . . மயக்கி
மோகத் திளைப்பில் சுருளும்
ஆண் சிலந்தியைக் கலவி
ஆற அமர ஆசையாய். . . என்ன சுவையாய். . .
கொன்று. . .
இரத்தம் உறுஞ்சுகிறாள் பெண் சிலந்தி

நிலவில் துளையிட்ட ராட்சத முனையை
மலைமுகட்டில் இழுத்துக்கட்டி
முடிகிறாள் மறுமுனையை

முதலையின் தருணக் காத்திருப்பில்
கோடித் தாபங்களாய் வலை விரித்திருக்கிறாள்

வெறும் கோதுகளாகிய பிற பூச்சிகளும்
ஆண் சிலந்திகளின் இறந்த உறுப்புகளும்
பெண் சிலந்தியின் சிறைவாசலில் எறியப்பட்டிருக்க

கனவின் துவாரங்கள் வழி
சொட்டித் தேங்கிய
காமக் கடல் அலைகள் பாய்கின்றது
சிலந்தி வயிற்றினுள்

சிலந்திப் பெண்ணிலிருந்து தோன்றி
நீளத் தொடங்குகிற நூலாம்படைகள்
மிதமிஞ்சிய வல்லமைகளாய்ப் பொங்கி
உலகைத் தாண்டிப் பெரிதாகிறது . . .


- அனார்

சிறுசுடரான யோனி

கொழுத்த களிநண்டுகள்
அலையும் அலையாத்திக்காட்டில்
செம்பவள சில்லென
ஒளிர்ந்துகொண்டிருக்கிறதென் யோனி

காமத்தின் பேரலையை
ஆத்திக்கொண்டிருக்கும் விழுதுகளின்
மேலே கூடமைக்கின்றன
தூரதேசப் பறவைகள்
நட்சத்திரங்கள் புதைந்துபோன
சதுப்பு நிலத்தின்
கூதிர்கால இரவொன்றில்
இளம் குஞ்சுகளுக்கு ஒளியேற்ற
கொத்திக்கொண்டு பறக்கிறது
கருங்கால் நாரை
அதன் அலகில்
சிறுசுடரென எரிகிறதென் யோனி
கரும்திரையென நிற்கும் வானில்
சிலாக்கோல்கள் போன்ற
சுரபுன்னைகாய்கள் நீரைக் கிழித்து
சேற்றில் விழும் சத்தம்
மிகமிகச் சன்னமாகக் கேட்கிறது
அப்போது.

- மாலதி மைத்ரேயி.


"குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்."

- இது ஆண்டாள் திருப்பாவையில் நாச்சியார் திருமொழி. 'பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா? அவள் தான் எழ விடுவாளா?' என்று கேட்கிறார் ஆண்டாள்.

ஆண்டாள் - காமத்தை பதிவு செய்வதில் மாலதி மைத்ரேயி போன்ற இன்றைய பெண் கவிஞர்களுக்கு ஒரு முன்னோடி என்று கூறலாமா??

- இன்பா

புதன், 18 ஜனவரி, 2012

நிலாச் செடி

எனக்கும் உனக்குமான
ஒரு குழந்தை உலகம்
அங்கே நீயும்
இங்கே நானும்
அந்த உலகத்தில்
ஒன்றாய் விளையாடுகின்றோம்...

சிறு பிள்ளை விளையாட்டாய்
என்னவெல்லாம் தெரிகிறது என்கிறாய்
எல்லாவற்றிலும்
நீயே தெரிகிறாய் என்கிறேன்...

கொஞ்சலும் கெஞ்சலுமாய்
பிறர் உணராத உணர்வுகளை
அர்த்தமில்லாத வார்த்தைகளால்
பேசிக் கொள்கிறோம்...

வீட்டுக்குள்ளே
என் வானம்
அழகாய் இருக்கிறது
உன் வானத்தில்
நான் இருக்கிறேனா என்கிறாய்
அந்த இருளிலும் அண்ணாந்து பார்க்கின்றேன்
அந்த இருட்டு வானில்
உன் சிரிப்பை போல
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
மின்னும் நட்சத்திரங்கள்
அழகாய் உன்னைப்போலவே...

இதை நான் சொல்லக்கேட்டு
இன்னும் அழகாய்
உனது புன்னகை...

எங்கே எனது நிலா
என்றாய்
அதைத்தானே
நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்...

கிடைத்தால்
உனக்கு பாதி
எனக்கு பாதி
என்கிறாய்
மறுக்க முடியாமல் சரியென்கிறேன்
அந்த நிலவுக்கு உரியவன்போல்....

உன் பாதி நிலவில்
ஒரு பாதியை
நட்டு வைக்கிறாய்
கனவின் கற்பனையில்
செடியாகி படருமா
மரமாகி வளருமா
ஆச்சர்யத்துடன் ஆராய்கின்றோம்...

செடியோ மரமோ
வளர்ந்து பின்னே அதில்
நிலா பூக்குமா
இல்லை
நிலா காய்க்குமா
பூத்தால்
தேன் இனிக்குமா
காய்த்தால்
பழம் சுவைக்குமா
மூளையை கழட்டி வைத்துவிட்டு
இதயங்களால்
ஆராய்ச்சி செய்கின்றோம்
இடைச்செருகளாய்
சாப்பாட்டு ராமன்
என்று பட்டம் வழங்குகிறாய்...

வளர்ந்து நிற்கும் அந்த
நிலாச் செடியில் ஏறி
வானம் போகலாம்
வழியில் பூத்து கனிந்த
நட்சத்திரங்களையும் நிலாக்களையும்
பறித்துப் போய்
அந்த வானில் ஒட்டி வைக்கலாம்
இருட்டிய அந்த வானம்
ஒளிரட்டும்
உனது புன்னகையைப்போல...
....Nathan

சனி, 7 ஜனவரி, 2012

பகுத்தறிவு - கண்ணதாசன்


பகுத்தறிவு உலகத்தை மாற்றி அமைத்தது.

காற்றில்லாத வீடுகளுக்குள்ளே மனிதர்கள் அடைபட்டு கிடந்த காலம் போய், சொகுசான ஒரு காலத்தை பகுத்தறிவு கொண்டு வந்தது.

உட்கார்ந்த இடத்திலேயே காற்று,படம்,ஒலி, ஒளி, செயற்கை மழை போன்ற ஷவர் பாத்; சிங்கார வாகனங்கள்; செவ்வாய் கிரகனதுக்கே பயணம் செய்ய கூடிய எல்லாவற்றையும் விஞ்ஞானம் நமக்கு கொடுத்ததற்கு காரணம் பகுத்தறிவுதான். அணுவை பகுத்து அதன் அளப்பரிய சக்தியை கண்டு பிடித்த அறிவு. உண்மையிலேயே அற்புதமான அறிவுதான்.

அந்த பகுத்தறிவு, அதிலே இது உண்டு. இதிலே அது உண்டு. என்று காட்டிற்றே தவிர, எதையும் 'இல்லை இல்லை' என்று சொல்ல முயன்றதில்லை.

ஆனால், நமது ஊர் பகுத்தறிவோ, அது இல்லை, இது இல்லை; அது பொய்' என்று சொல்ல முனைந்ததே தவிர, எதிலே எது அடக்கம் என்று கண்டு கொள்ளக்கூடியதாக இல்லை.

ஒரு பகுத்தறிவாளர் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

''அய்யா, 'சிவாய நமவென்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை' என்கிறார்களே, 'சிவாய நம' என்று சொல்லிக்கொண்டே ஆயிரம் வால்ட் மின்சாரத்தை தொட்டால் அபாயம் ஏற்படாதா?''

__என்று கேட்கிறார்.

நல்லது. அபாயம் ஏற்படத்தான் செய்யும்.

கொஞ்சம் அறிவோடு ஆராய்ந்தால் விஷயம் விளங்கும்.

அந்த பாடலை பாடிய அடியவர் ' 'சிவாய நமவென்று மின்சாரம் தொடுவோர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை' என்று சொல்லவில்லை. 'சிந்தித்திருப்போர்க்கு' என்று தான் சொன்னார்.

அவர் சிந்தனையை சொன்னாரே தவிர செயலை சொல்லவில்லை.

கடிதம் எழுதியவர் மீது குற்றமில்லை. எல்லாம் நம்ம ஊர் பகுத்தறிவு படுத்தும் பாடு.

நம்ம ஊர் பகுத்தறிவு ஓர் அழகான பெண்ணை கண்டால் அவளது அழகையோ, பண்பையோ சிந்திப்பதில்லை. அவளுடம்பில் எத்தனை வீசை கறி, எத்தனை வீசை எலும்பு என்றுதான் ஆராயும்!.

'மனதைப் பகுத்தறியலாம்;உடம்பை பகுத்தறியலாமா?என்றுகூட யோசிப்பதில்லை!

இந்து மத தத்துவங்கள் எடுத்த வேகத்தில் பிடித்து வைத்த பொம்மைகளில்லை. பகுத்து பகுத்து அறிந்த பின்பே உருவாக்கப்பட்டவை.

ஒன்பது ஓட்டைகள் இருந்தும் , உடம்புக்குள்ளே ஒரு காற்று எந்த சக்திக்கு கட்டுப்பட்டு நீண்ட காலம் வெளியேறாமல் நிற்கிறது?

விஞ்ஞானிகளே யோசிக்கும் இடம் இது .

ஆனால், நம்ம ஊர் பகுத்தறிவு இதை யோசிக்காது. 'இது இயற்கையாகவே நிற்கிறது ' என்று சொல்லும்.

எது அந்த இயற்கை ?

மண்ணா ?.. மரமா ?. செடியா ..? கொடியா ..?

இப்போது மேல்நாட்டு விஞ்ஞானிகள் உடம்பில் இருந்து வெளியேறும் உயிர் எவ்வளவு வேகத்தில் வான மண்டலத்துக்கு பயணமாகிறது என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வெளியேறும் உயிரின் வேகம்தான் ஆராய்ச்சியில் இருக்கிறதே தவிர , அது வெளியேறாமல் இருக்கும் வழி அவனுக்கும் தோன்றவில்லை ; அடுத்த தலைமுறைக்கும் தோன்றவில்லை.

மானிட சக்திக்கு மேற்ற்பட்ட மூலத்தை புகழ் பெற்ற விஞ்ஞானிகளே மறுத்ததில்லை .

சந்திர மண்டலத்து பயணிகள் சர்ச்சுக்கு போய்வந்து தான் பயணமானார்கள் .

ஞானம் என்ற மூலத்திலிருந்துதான் விஞ்ஞானம் மெய்ஞானம் இரண்டுமே தோன்றின .

இரண்டுமே ஒரு மூலத்தை நம்புகின்றன.

'சுடு 'என்று சொன்னவுடனே யாரை சுடுகிறோம் என்று பார்க்காமலே சுடுகின்ற படைகள்தாம் நாட்டுக்கு

வெற்றி தேடி தந்திருக்கின்றன.

அதே நேரத்தில் படைகள் பகுத்தறிவை உபயோகிக்கத் தொடங்கினால், பகுத்தறிவு மிஞ்சும் . நாடு மிஞ்சாது.

'போரில் தயக்கம் காட்டிய அர்ஜுனனைப் பார்த்து கண்ணன் அதை தான் சொன்னான்.

'போர் என்று வந்தபின் உறவினர்கள் என்ற ஆராய்ச்சி வெற்றிக்கு உதவாது ' என்றான்.

கடைசியில் கண்ணன் மீது மூடநம்பிக்கை வைத்து அர்ஜுனன் காண்டீபத்தை தூக்கினான் ; முடிவு வெற்றியாக கனிந்தது .

கீதையில் கர்மயோகம் மானிடக் கடமைகளை வலியுறுதுகின்றது .

பக்தி யோகம் தியானத்தை வலியுறுத்துகிறது .

கடமையும் நம்பிக்கையுடன்தான் நடை பெறுகிறது ; தியானமும் நம்பிக்கையுடன்தான் நடைபெறுகிறது .

'மனம் உண்டானால் வழி உண்டு' என்பது பெரியோர் வாக்கு .

அது மானிட தர்மத்துக்கும் பொருந்தும் .

ஆகவே தெய்வ நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று சொல்வதை பற்றி நான் வருந்தவில்லை.

''இந்த மூடனும், அந்த அறிவாளியும் நம்மிடம் தான் வரப் போகிறார்கள் '' என்ற நம்பிக்கை தெய்வத்துக்கு இருக்கிறதே , யார் என்ன செய்ய முடியும் !.

மூட நம்பிக்கை...


ஆண்டவன் மீதும் சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கிற நம்பிக்கையே 'மூட நம்பிக்கை' என்று சொல்கிற பகுத்தறிவாளர்கள் உண்டு.

அவர்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் கெட்டிக்காரத் தனம் என்றும் நம்முடைய நம்பிக்கை மட்டும் மூடத்தனம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

நான் சொல்கிறேன் நம்பிக்கையில் மூட நம்பிக்கை,குருட்டு நம்பிக்கை,கெட்டிக்கார நம்பிக்கை எதுவும் கிடையாது.

சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே மூடத்தனம்.அதில் தனியாக ஏது மூடத்தனம்?

நாட்டு மக்கள் எல்லோரையும் நாத்திகர்களாக ஆக்கிவிட முடியும் என்று நம்பித்தான் பெரியார் பிரசாரம் செய்தார்.அந்த நம்பிக்கை எப்படி முடிந்தது?

திராவிட நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் அந்த காலத்தில் பலர் தி.மு.க.வில் சேர்ந்தனர்.அதன் கதி என்ன?

தனுஷ்கோடி எக்ஸ்ப்ரஸில் போனவர்கள் ஊர் போய் சேரலாம் என்ற நம்பிக்கையில் தான் போனார்கள்.

அந்த நம்பிக்கை மூடத்தனம் என்பதை அரியலூர் நிரூபித்தது

நம்பிக்கை என்பது இப்படி நடக்கும் என்று ஆசைப்படுவது.அப்படி நடக்காமலும் போய் விடலாம்.அப்போது அது மூடதனமாகி விடுகிறது

மகன் கல்லூரிக்கு போகிறான் என்று நம்பித்தான் தகப்பன் பணம் அனுப்புகிறான்.அவன் அதை எப்படியும் செலவழிக்கலாம்.

இவர் நமது ஒழுங்கான பிரதிநிதியாக இருப்பார் என்று நம்பித்தான் மக்கள் ஒருவருக்கு வோட்டளிக்கிறார்கள்.அவர் எப்படிஎப்படியோ மாறிவிடுகிறார்.

ஆண்டவனை நம்புவதிலும் இதே நிலைதான்

அது தோல்வியுற்றால் மூடத்தனம்.வெற்றி பெற்றால் கெட்டிக்காரத்தனம்

ஆகவே நம்பிக்கை என்ற மூடத்தனம் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு.

அதில் ஆஸ்திகன் மட்டுமென்ன தனி ஜாதி!

இதுவரை எந்த நம்பிக்கை எல்லா நேரங்களிலும் பலித்திருக்கிறது?

ஆனால் நம்பிக்கை என்ற மூடத்தனத்தை ஏன் எல்லாருமே பயன்படுத்துகின்றனர் ?

அதிலே மனதுக்கு ஒரு சாந்தி!

தெய்வ நம்பிக்கை நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்குமாகவே ஏற்பட்டது.

விஞ்ஞான நம்பிக்கை போல ஒரு கட்டத்தில் தோல்வியுற்றாலும் மறு கட்டத்தில் வெற்றி பெறுவது தான் தெய்வ நம்பிக்கை

ஒரு சூத்திர தாரியின் கை பொம்மைகள் நாம் என்பது மறக்க முடியாதது

மரணம் என்ற ஒன்று அதை தினசரி வலியுறுத்துகிறது.

இவ்வளவுக்கும் பிறகும் தெய்வ நம்பிக்கையை சிலர் மூட நம்பிக்கை என்று சொல்வார்களானால் நான் ஒரு மூடன் என்று சொல்லிக் கொள்வதிலே பெருமை படுகிறேன்.

முட்டாள் தனத்திலே இருக்கிற நிம்மதி,கெட்டிக்காரதனதிலே இல்லை,

உடம்பில் எல்லா நோயும் இருந்தும் ஒன்றுமே இல்லை என்று நம்புகிற முட்டாள் ஆரோக்கியமாகவே இருக்கிறான்.

ஒரு நோயும் இல்லாமல் ஒவ்வொரு மயிர்காலையும் பார்த்து இது அதுவாக இருக்குமோ?இதுவாக இருக்குமோ? என்று ஆராய்ச்சி செய்கிற அறிவாளி நித்திய நோயாளியாகவே சாகிறான்.

பாம்பு நஞ்சு நிறைந்தது.வேங்கை பயரமானது.யானையின் பலத்தின் முன்னால் மனிதன் எம்மாத்திரம்?

ஆனால் அவற்றை ஆட்டி வைக்கிற திறமை சில மனிதகளிடம் இருக்கிறது.

உங்களாலும் எந்நாளும் முடியுமா? அந்த வாய்ப்பு சிலருக்கே அமைகிறது.

அதனால் தான் வாய்ப்பு இறைவன் அளிப்பது என்றேன்.அதை முறையாக பிடித்துகொண்டு முன்னேறுவதை அதிர்ஷ்டம் என்கிறேன்.

ஹிட்லருக்கு கிடைத்த வாய்ப்பு ஆணவத்தால் அழிந்தது.

சோவியத் மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு திறமையினால் வளர்ந்தது .

வாய்ப்பை தவறவிடுபவனே துரதிர்ஷ்டசாலி.

அந்த வாய்ப்பு எல்லோருக்கும் எப்போது வரும்?

அது முன்கூட்டியே தெரிந்து விட்டால் இறைவனை ஏன் நினைக்கப் போகிறீர்கள்!


--கண்ணதாசன்.