nanrasithathu.blogspot.com

சனி, 30 ஏப்ரல், 2011

பகவான் பாபா!

பகவான் பாபா...
நிலம் புரள -
ஒருநீள அங்கி -
அணிந்து நடந்த -
ஓர்ஆன்ம வங்கி;
இந்த வங்கியின்இருப்பு -
அருள்;பொருள்;அவற்றைக்கொண்டு -
அதுஅகற்றியது -
மன்பதையின்மருள்; இருள்!

'ஓம்’ என்பதுஓரெழுத்து;
அதன் -பதவுரைதான் -
பகவான்பாபா எனும் ஈரெழுத்து;
அந்த -ஈரெழுத்து -
நீரெழுத்து அல்ல;
நிலையெழுத்து;
அதை ஓதிநின்றார்க்கு மாறியது தலையெழுத்து!

பாபா - நம்பவ நோய் தீர்க்க -
விண்ணில் இருந்து -
இந்தமண்ணில் இறங்கிய மருந்து!
ஆம்;
அவர் நமது -நோயைத் தின்ற மருந்து;
அந்தமருந்தைத் தின்றுவிட்டதே நோய்!
அய்யகோ!
அடாத -
இந்தஅக்கிரமத்தைஆரிடம் சொல்லி அழுவோம் போய்?

பிறந்ததுபிறவாதது;
பிறப்பும் இறப்பும்பிரமத்திற் கேது?
வாழ்வில் -அடிபடாத பேர்க்கு -
இதுபிடிபடாது!
பாபா -பலருக்கும் நிழல் பரப்ப...
விரிந்து நின்றவிருட்சம்;
இதன்வேரடி - அந்தஷீரடி!
மகாராஷ்டிரத்தில்மறைந்தது;
ஆந்திராவில்அவதரித்தது;

நீரில்லார்க்குநீரும் -
சோறில் லார்க்குச்சோறும் -
உதவிஉபகரித்தது;
அதையா - காலம்அபகரித்தது?!

புட்டபர்த்தியில் -
ஒரு குடைக் கீழ்புவியைக் கொண்டுவந்து -
கட்டிக் காத்தவர் பாபா;
அதைக்கலைக்கா திருக்க வேண்டும் ரூபா!
----வாலி

புதன், 27 ஏப்ரல், 2011

ஐயையோ ரிசல்ட்..!

பரீட்சை அப்டீங்கற விஷயத்தை கண்டுபிடிச்ச புண்யவான் யாருன்னு தெரியலை.. தெரிஞ்சா, 108 தேங்காய் உடைக்கணும் - அவர் தலை மேல.!
பின்ன என்ன சார்.. பரீட்சைன்னு ஒண்ணு வெச்சா, ரிசல்ட்ன்னு ஒண்ணு வந்து தொலைக்குது.. எந்த பயத்தையும் விட இந்த ரிசல்ட் பயம் தான் பெரிய பயமா இருக்கு..!
பத்தாங்கிளாஸ்.. அதாங்க, எஸ்.எஸ்.எல்.சி-க்கு போனவுடனே, ஆளாளுக்கு 'பப்ளிக் எக்ஸாம்' 'பப்ளிக் எக்ஸாம்'னு நமக்கு பிரஷரை ஏத்துவாங்க.. வீட்ல நிம்மதியா கதை புக் படிக்க முடியாது, டிவி பாக்க முடியாது.. அட, ஒரு கல்யாணம், விசேஷம்னு யாராச்சும் கூப்பிட வந்தா, அவங்க கூட கொஞ்ச நேரம் பேசக் கூட விடமாட்டாங்க. படி படின்னு ஒரே ரோதணை. நாம படிச்சே தீரணும்னு ஒரு கூட்டமே நமக்கு எதிரா திரண்டிருக்கும்.
பரீட்சை நேரத்துல ஏற்கனவே பயந்து இருக்க நமக்கு, அட்வைஸ் பண்றேங்கற பேர்ல ஆளாளுக்கு ஆடியோ பேதி மருந்து குடுப்பாங்க.. இந்த பாட புஸ்தகம் இருக்கே.. ஹப்பா.. எனக்கு அதை தொறந்த அஞ்சாவது நிமிஷம் கொட்டாவி வரும், ஆறாவது நிமிஷம் தூக்கம் வரும்.எட்டாவது நிமிஷம் டீ வரும்.
அம்மா டீ குடுக்கும் போது அவங்களை பாத்தா பாவமா இருக்கும். நம்மளை என்னவோ 'உலகம் சுற்றும் வாலிபன்' எம்ஜியார் (சயின்டிஸ்ட் முருகன்!) லெவலுக்கு மதிச்சு, மாத்தி மாத்தி டீ போட்டு குடுத்துகிட்டே இருப்பாங்க.. அது என்னமோ, என்ன மாயமோ தெரியலை.. அந்த டீயை குடிச்சா இன்னும் நல்லா Fresh-ஆ தூக்கம் வரும்.
பரிட்சை நேரத்துல என்னைத் தவிர எல்லாரும் என் படிப்பு மேலயே அக்கறையா இருப்பாங்க.. பத்தாக்குறைக்கு டிவில வர்ற விளம்பரம், பத்திரிகைகள்ல வர கட்டுரை எல்லாமே படிப்பு.. படிப்பு.. படிப்பு பத்தி தான்.
எனக்கு ஒரு சந்தேகம்.. அது எப்படி பரிட்சை நேரத்துல மட்டும் இந்த பாழாப்போன ஜுரம் வந்து தொலைக்க மாட்டேங்குது.? சினிமா பாட்டு கேக்கணும்னு ஏன் அவ்ளோ ஆசையா இருக்குது?
ஒரு வழியா கடைசி பரிட்சைய எழுதி முடிச்சதும் மனசுக்குள்ள வந்த சந்தோஷம் இருக்கே.. ஹைய்யோ.. அடுத்த ஒரு மாசம் கிரிக்கெட், சினிமா, ஃபிரண்ட்ஸ்னு கலக்கலா போச்சு..
காலைல எழுந்து பசங்களோட ஜாகிங்.. வீட்டுக்கு வந்து டிபன், மைதானத்துக்கு போய் கிரிக்கெட், மறுபடியும் வீடு. குளியல். சோறு. கிளம்பி எவன் வீட்டுக்காவது போய் செஸ் இல்லாட்டி கேரம் போர்டு ஆடிகிட்டே அரட்டை, டிவி, பிரவுசிங் சென்டர், நொறுக்கு தீனி, மறுபடியும் கிரிக்கெட். 6.30 மணிக்கு மேல Flood Light மேட்ச் நடக்கற இடத்துக்கு போய் அலப்பறை. ஆஹா.. நிம்மதியா போய்கிட்டிருந்தது.
"பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. வரும் மே மாதம்.. " ஐயையோ.. அதுக்குள்ள ரிசல்ட்டா..?! என்ன அவசரம்.. நல்லா பொறுமையா டயம் எடுத்து இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு ரிசல்ட்டை வெளியிடலாமே..
நல்லா படிக்கற பசங்களுக்கு கவலை இல்லை.. கண்டிப்பா புட்டுக்கும்னு தெரிஞ்ச பசங்களுக்கும் கவலை இல்லை.. என்னை மாதிரி மதில் மேல் மியாவ் தான் இதுல அவஸ்தைபடறோம்.
இன்னும் பத்து நாள்ல ரிசல்ட் வரப் போகுதுன்னு தெரிஞ்ச உடனே, எனக்கு மனசு பக் பக்குனு அடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. "பாஸ் பண்ணிடுவ இல்லை.. ?"னு அப்பா கேக்கும்போது "கண்டிப்பா.."ன்னு பலவீனமா சொன்னேன். அப்பா என் கண்ணையே ஒரு 3 செகண்ட் பாத்துகிட்டு இருந்தார்.. ஒருவேளை அப்பாவுக்கு நாம கணக்கு பரிட்சை சரியா எழுதலைன்னு தெரிஞ்சிருக்குமோ..?
அப்பா நகர்ந்ததும் அம்மா வந்து, " நல்லா தானே எழுதியிருக்க.. பாஸ் பண்ணிடுவ இல்லை..? உங்க அத்தை ஏற்கனவே என்னை மதிக்க மாட்டா.. நீ பெயில் ஆயிட்டா உங்க அப்பா பக்கத்து உறவுக்காரங்களுக்கு ரொம்ப இளக்காரமா போயிடும்டா.." அதாவது, நான் பாஸ் பண்ணி ப்ளஸ் ஒன் போறது கூட முக்கியமில்லை.. உறவுக்காரங்க மத்தில தலைக்குனிவு வந்திடக் கூடாது..! என்ன உலகம்டா இது..!
மறுநாள் பேப்பர் படிச்சிட்டிருந்த அப்பா, கண்ணாடியை கழட்டி வெச்சுட்டு, பாத்ரூமுக்கு போயிருந்தார் போல.. நான் கண்ணாடியை பாக்காம, பேப்பரை அப்டியே எடுக்க, கண்ணாடி 'க்ளிங்' ஆயிடுச்சு..!
அப்பா வந்து உடைஞ்சிருந்த கண்ணாடியை பாத்தார்.. கண்ணாடி போடாத அப்பாவோட முகத்தைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. என்னை முறைச்சது கூட பரவால்ல.. திட்டியிருந்தா கூட திருப்தியா இருந்திருக்கும்.. ஒண்ணும் சொல்லலை.. உடைஞ்ச துண்டுகளை ஒரு பேப்பர்ல எடுத்து போட்டுகிட்டு, " ரிசல்ட் வரட்டும்.."ன்னு சொல்லிட்டு போயிட்டார். கண்ணாடி உடையறதுக்குக்கும், என் ரிசல்ட்டுக்கும் என்ன சம்மந்தம்.. ? கண்ணாடியை உடைச்சதுக்கு திட்டித் தொலைக்க வேண்டியது தானே. ரிசல்ட் புட்டுகிச்சுன்னா, இதுக்கு சேத்து வெச்சு.. ஐயோ..!
google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);
கடவுளே.. நான் எப்படியாவது பாஸ் ஆகிடணும்.. இந்த ஒரு தடவை மட்டும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு.. உன் உண்டியல்ல 10 ரூபா போடறேன்.
எங்க செட்ல யாரெல்லாம் பெயில் ஆவான்னு யோசிச்சு பாத்தேன்.. ம்ஹூம்.. சொல்ல முடியாது.. எல்லாருமே பாஸ் ஆனாலும் ஆயிடுவானுங்க.. நான் மட்டும் பெயில் ஆகி, மத்தவன் எல்லாம் பாஸ் ஆகிட்டா.. ஐயையோ.. அதுமட்டும் நடக்கக் கூடாது.. குறைந்தபட்சம், பக்கத்து வீட்டு மகேஷ் மட்டுமாவது பெயில் ஆயிடணும்.. அவன் பிட் அடிச்சிருப்பானோ.. கடவுளே.. என்னை பாஸ் பண்ண வெக்க முடியாட்டி, அட்லீஸ்ட் எனக்கு கம்பெனி குடுக்கமகேஷையும் பெயில் ஆக்கிடு.. 20 ரூபா டீலிங்..!
அதுக்கப்பறம் எந்த எதிர்மறையான வார்த்தைகள் காதுல விழுந்தாலும், அது என் ரிசல்ட்டை பத்தி ஞாபகப்படுத்திகிட்டே இருந்தது. 'போச்சு' 'வராது' 'இல்லை'ன்னு எல்லா வார்த்தைகளையும் மாத்தி மாத்தி யாராவது சொல்லிகிட்டே இருந்தாங்க.
பஸ்ல போயிட்டிருக்கும்போது, கோவில், சர்ச், மசூதி எதையும் விடலை.. என் ரிசல்ட்டுக்காக எல்லா சாமிகிட்டயும் சொல்லி வெச்சாச்சு.. என் கணக்கு பேப்பரை திருத்தும்போது, திருத்தரவருக்கு பைத்தியம் பிடிச்சு, நூத்துக்கு 80 மார்க் போடற மாதிரி பகல் கனவெல்லாம் கண்டேன்.. திட்டமிட்டு காணும் கனவு எல்லாம் பலிக்குமான்னு தெரியலை.
ரிசல்ட் வந்த அன்னிக்கு பசிக்கவே இல்லை.. அம்மா என்னை விடாம "சீக்கிரம் சாப்பிட்டுடு.."ன்னு வம்படியா சாப்பிட வெச்சாங்க.. அன்னிக்கு வீட்ல எல்லாரும் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருந்தாங்க.. அப்பா ஆபிஸுக்கு போவாரா மாட்டாரான்னு சந்தேகமா இருந்தது.. கடவுளே.. அவர் கிளம்பி ஆபிஸ் போயிடணும்.. உண்டியல் அக்கவுண்ட்டில் இன்னும் ஒரு 5 ரூபாய் கூடியது.
ரிசல்ட் பேப்பர் இப்ப வரும்.. அப்ப வரும்னு அலைகழிய வெச்சிட்டாங்க.. பக்கத்து தெரு, அடுத்த தெருன்னு நாயா பேயா அலைஞ்சு, பேப்பரை வாங்கினா கை காலெல்லாம் நடுங்குது. பேப்பர்ல நம்பரை தேட முடியலை.. கண்ல பூச்சி பறக்குது.. வயத்துல பட்டாம்பூச்சி பறக்குது.. பேப்பர்ல டுடோரியல் காலேஜ் விளம்பரம் எல்லாம் போட்டிருக்காங்க.. ஒரே அபசகுனமா இருக்குது..
என் நம்பர் சுத்தமா மறந்து போச்சு.. பேப்பரை தரைல விரிச்சு, அது மேலயே மண்டி போட்டு உக்காந்து, நம்பரை ஞாபகப்படுத்தி, கஷ்டப்பட்டு தேடிப் பாத்ததுல.. நம்பர் இல்லை.. இன்னொரு தடவை ஒழுங்கா பாக்கறேன்.. ம்ஹூம்.. இல்லை.. என்னமோ தெரியலை.. எல்லா டென்ஷனும் போய், நிம்மதியா இருந்தது..
நாம ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் மார்க் எதிர்பார்த்து அது வரலைனா வருத்தப்படலாம்.. பேப்பர்ல போட்டோ வர வேண்டாம் பாஸ்.. வெறும நம்பர் மட்டும் வந்தா போதும்னு பொன் செய்யும் மருந்தா மனசை வெச்சிருக்கோம்.. அதுக்கு கூட வழியில்லாம போயிடுச்சு..
திடீர்னு மகேஷ் வீட்லேந்து பயங்கரமா சத்தம் கேட்டது.. மகேஷை திட்டிகிட்டிருந்தாங்க.. ஆஹா.. அவனுக்கும் புட்டுகிச்சா..?! நன்றி நண்பா..!
மேட்டரை கன்ஃபர்ம் பண்ணிக்க மகேஷ் வீட்டு கிட்ட போனேன். " பக்கத்து வீட்டு பையனும் உங்கூட தானே படிக்கறான்.. அவன் பாஸ் பண்ணிட்டான்.. நீயும் இருக்கியே தண்டம்.. தண்டம்.. "
என்ன சொல்றாங்க.. நான் பாஸா.. ? எப்படி?
அட, ஆமா.. பதட்டத்துல என் நம்பருக்கு பதிலா மகேஷ் நம்பரை பேப்பர்ல தேடியிருக்கேன்.
பேப்பரை எடுத்து பார்த்ததுல, என் நம்பர் என்னைப் பார்த்து கண் அடிச்சுது.
அப்பா வீட்டுக்குள்ளேயிருந்து பயங்கர சந்தோஷத்துடன் வெளியே வந்து, முதுகைத் தட்டி விட்டு ஆபிஸுக்கு போனார். கண்ணாடி போடாத அப்பாவின் முகம் இப்ப அழகா இருந்தது.
மறுபடியும் மறுபடியும் பேப்பரை தரைல பரப்பி, என் நம்பரை பாத்துகிட்டே இருந்தேன்.
இப்ப நினைச்சு பாத்தா அந்த ரிசல்ட் டென்ஷன் இருக்கே, அதுவும் ஒருமாதிரி நல்லா தான் இருக்கு, இல்லை.!

---நன்றி விகடன்

சனி, 23 ஏப்ரல், 2011

தமிழ் ஈழ சிங்களம்

தமிழர்களின் வாழ்விலும் வரலாற்றிலும் இலங்கைத் தீவுப் பிரிக்க முடியாத ஒரு பங்கினைக் கொண்டுள்ளது. பாரம்பரியமாக தமிழகம் என்றப் பதத்தில் இலங்கைத் தீவு அடங்கப் பெறாவிட்டாலும், இலங்கைத் தீவுக்கும் தமிழகத்துக்குமான தொடர்பு பன்னெடுங்காலமாக இருந்து வருவது. தமிழகம் - இலங்கை ஆகிய இந்தப் பகுதியில் ஒரே திராவிட இனமாக பல்வேறு இனக்குழுக்களாக வாழ்ந்த காலங்களில் பெரும் சிக்கல்களோ பிரச்சனைகளோ எழவில்லை.
தமிழகம்:
வேங்கட மலைக்குத் தெற்கேயும், குமரி முனைக்கு வடக்கேயும் வாழ்ந்த ஒன்று போல மொழி பேசும் இனக்குழுக்கள் அனைத்தையும் உள்வாங்கி அது ஒரு தேசியமாக எழுச்சிப் பெற்றது. அம்மக்கள் தம்மை தமிழர்கள் என அழைத்துக் கொண்டார்கள். தமக்கான மொழி, அடையாளம், கலாச்சாரத்தைக் கட்டி எழுப்பினார்கள். அம்மக்களில் இருந்து முப்பெரும் தேசம் உருவானது. அவை சேர, சோழ, பாண்டிய என்னும் மூவேந்தர்கள் உருவாகினர். அக்காலக் கட்டத்தில் அவர்கள் தமிழகத்துக்கு வெளியேயும் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றார்கள். அதனால் தமிழகம் பாதுக்காப்பாக இருக்கும் என நம்பினார்கள். அப்போதையக் காலங்களில் தமிழகத்தின் கரையோரப் பகுதிகளில் இருந்து நெடுங்காலமாக தனித்து இருந்த இலங்கைத் தீவுக்கு குடியேறத் தொடங்கினார்கள். பெரும்பாலான குடியேற்றங்கள் மீன் பிடி சார்ந்தத்தாகவும், புதிய நிலப்பரப்பில் பனை, தென்னை மரங்கள் வளர்ப்புக்காகவுமாக இருந்தது.
இலங்கைக் குடியேற்றம்:
ஆனால் அங்கு தமிழர்கள் குடியேறத் தொடங்கிய காலத்தில் இலங்கைத் தீவில் வேட்டுவர் மக்கள் அரசு ஏதுமின்றி ( PRIMITIVE) வாழ்ந்து வந்தார்கள். பெரும்பாலும் இலங்கைத் தீவினை பாண்டியத் தேசத்தின் நிழலில் இருந்து வந்துள்ளது. இலங்கையின் வடக்குக் கரைப் பகுதிகள் தவிரே ஏனையப் பகுதிகள் மிகுந்தக் காடுகளாகவும், வேடுவர் உட்பட காட்டு மிராண்டிகள் வாழ்ந்தும் வந்திருக்கக் கூடும். ஆகவே பாண்டிய நாட்டின் தாமிரபரணி நதியின் எதிரே இருந்த இன்றைய புத்தளம் பகுதியில் குடியேறியப் பாண்டி நாட்டு பரதவர்கள் தாமிரபரணி என்னும் சிறுக் குடியேற்றத்தை அமைத்து குடியேறினார்கள். இலங்கையின் வடமேற்குப் பகுதியே தமிழர்கள் குடியேறிய முதல் பகுதியாக இருந்திருக்கக் கூடும்.

தாமிரபரணி அரசு:

தாமிரபரணி குடியேற்றம் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாக மாறி தாமிரபரணி என்னும் சிற்றரசாக மாறி இருக்க வேண்டும். அந்த சிற்றரசு பாண்டியப் பேரரசின் கீழ் இருந்து வந்திருக்க வேண்டும். இந்தக் குடியேற்றம் விரிவடைந்து செல்லும் போது ஏற்கனவே வாழ்ந்து வந்த வேட்டுவர்களுக்கும், தமிழர்களுக்கும் பிரச்சனைகள் வந்திருக்க வேண்டும். இந்த குடியேற்றத்தை அண்மைக் காலங்களில் ஆஸ்திரேலியாவில் குடியேறிய வெள்ளை குடியேற்றங்களுக்கு ஒப்பானவையாக இருந்திருக்க வேண்டும். தாமிரபரணி குடியேற்றத்தின் சிற்றரசுகளும், மக்களும் தமிழகத்தில் இருந்து சென்றிருக்க வேண்டும். தாமிரபரணிக்கும் பாண்டிய நாட்டுக்குமான தொடர்பினை மகாவம்சமே உறுதி செய்கின்றது.
ஆரம்பக் கால சிங்கள் மன்னர்களின் பெயர்கள் அனைத்துமே பாண்டு என்ற பெயரினைத் தாங்கி வருதலையும், விஜயன் பாண்டியன் நாட்டு இளவரசியை மணந்தத்தாக கூறும் கதைகளே இவற்றை உறுதி செய்கின்றன. அதே போல நாடார் இன மக்கள் இன்றளவும் ஈழவர் என கேரளத்தில் அழைக்கப்படுவதும். ஈழவரின் குலப் புராணத்தில் நாடார் மன்னனான நரசிம்மன் அல்லி என்னும் பாண்டிய இராணியோடு இலங்கைக்கு குடியேறியதாகவும், அவர்களுக்கு குழந்தை இல்லாததால் தமிழகம் திரும்பியதாகவும், பின்னர் அல்லியின் தம்பி முறையிலானவன் இலங்கை சென்று நாடாண்டதாகவும் கூறப்படும் கதையும் மகாவம்சத்தின் விஜயன் கதையும் ஒன்றே போல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தாமிரபரணியை கிரேக்க அறிஞர்கள் பண்டையக் காலத்தில் தாப்ரோபனே என அழைத்ததும் குறிப்பிடத்தக்கது.

பௌத்த வருகை :

ஆகவே தமிழகத்தில் இருந்து குடியேறிய மக்கள் தமக்கான ஒரு சிறிய அரசை இலங்கைத் தீவில் அமைத்துள்ளனர். அந்த அரசு பாண்டிய நாட்டுக்கு கீழ் திறை செலுத்தும் அரசாக இருந்து வந்துள்ளது. ஈழவர் என அழைக்கப்படும் நாடார் இன மக்கள் அங்கு சென்று குடியேறியதால் தாமிரபரணி என்னும் நாடு ஈழ நாடு என்றும் அழைக்கப்பட்டு இருத்தல் வேண்டும். இக்குடியேற்றம் ஆஸ்திரேலியா தீவில் வெள்ளையர் ஏற்படுத்திய ஒருக் குடியேற்றத்துக்கு ஒப்பாக இருந்திருக்க வேண்டும். காலப் போக்கில் குடியேறிய மக்களும், இலங்கைத் தீவில் காட்டுமிராண்டிகளாக அந்தமானிய பழங்குடிப் போல வாழ்ந்த மக்களும் கலந்திருக்க வேண்டும்.
இப்படியான சூழலில் தான் கிமு 3ம் நூற்றாண்டில் வடநாட்டில் இருந்து பௌத்தமும், சமணமும் தென்னாட்டுக்குப் பரவுகின்றது. தென்னாட்டின் மூலமாக இலங்கைத் தீவுக்கும் பௌத்தம் பரவுகின்றது. சமண மதம் சுதேசிகளின் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரு மதமாகும். அவர்கள் பள்ளிகள் அமைத்து சமணத்தையும் தமிழையும் தமிழகத்தில் வளர்த்தார்கள். ஆனால் மாறாக பௌத்தம் தமிழை விடவும் அவர்களின் பிராகிருத மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்த மதமாகும். அதனால் தான் இன்றளவும் சமண தமிழ் இலக்கியங்கள் மிகுதியாக உள்ளன. ஆனால் பௌத்த தமிழ் இலக்கியங்காள் மிகவும் குறைவு மாறாக அவர்கள் பல நூல்களை புகாரில் இருந்து வடமொழியில் தான் இயற்றியுள்ளார்கள். அதே போல பௌத்தம் சேர நாட்டிலும், தென்பாண்டிப் பகுதியிலும் மிகுதியாக பரவி இருத்தல் வேண்டும். மாறாக சமணம் சோழ நாட்டில் மிகுதியாக பரவி இருத்தல் வேண்டும்.

கலிங்கர் வருகை :

பௌத்தத்தின் வருகையால் இலங்கையின் தாமிரபரணி நாட்டு மக்கள் பூரண பௌத்த சமயிகளாக மாறினார்கள். பௌத்தத்தின் தாக்கத்தால் சேர நாடு வடமொழிமயமாகத் தொடங்கியது போல, இலங்கைத் தீவில் வாழ்ந்த மக்களும் வடமொழிமயமாகத் தொடங்கினார்கள். எப்போதும் தமிழகத்தின் நிழலில் வாழ்ந்து வந்த இலங்கை மக்கள் தமது புதிய மத வருகையால் தமக்கான ஒரு தனித்துவத்தைப் பேணத் தொடங்கினார்கள். இதே தனித்துவத்தை சேர நாட்டவரும் பேணத் தொடங்கினார்கள். தமிழகம் முழுதும் பௌத்த சமணமாக இருந்தக் காலத்தில் இலங்கை மன்னன் கயவாகு கண்ணகிக்கு கோவில் கட்டும் விழாவில் தமிழக மன்னர்களின் வேண்டுகோளுக்கு அமைய வந்த செய்திகள் அக்காலத்தில் இலங்கைக்கும், தமிழகத்துக்கும் பகைமை என்று ஒன்றுமில்லாமல் இருந்தத்தை உறுதி செய்கின்றது. பௌத்த மதத்தின் வருகை கலிங்க நாட்டு ஊடாக வந்தத்தால் கலிங்க நாட்டுக்கும் இலங்கைக்குமான வாணிப தொடர்புகள் பெருகின, கலிங்க நாட்டில் இருந்து இலங்கை முழுதும் மக்கள் குடியேறத் தொடங்கினார்கள். இதனால் இலங்கைத் தீவின் மொழி பண்பாடு மேலும் மாற்றமடையத் தொடங்கியது.

இலங்கைத் தேசியம் :

இக்கால கட்டங்களில் தான் சோழப் பேரரசு பாண்டிய நாட்டின் மீது படையெடுப்புகள் செய்தும் உள்ளன. தலையாங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் போன்ற மன்னர்கள் சோழர்களோடு போரிட்டு வென்றாலும். சோழர்களின் பலம் பாண்டிய நாட்டை தம் வசமாக்கிக் கொண்டதே அதிகம். அப்படி பாண்டிய நாடு தம் வசமாகும் போது எல்லாம் பாண்டிய நாட்டின் நிழலில் இருந்த இலங்கைத் தீவையும் தமதாக்கிக் கொண்டனர். இதற்கு காரணமாக அமைவது சோழர்கள் பாண்டிய நாட்டினை போரிட்டு வெல்லும் போது எல்லாம் பாண்டிய மன்னர்கள் பாண்டிய அரசின் முடியை இலங்கைத் தீவில் கொண்டு மறைத்துவிடுவார்கள். முடி இல்லாமல் ஒரு நாட்டை தமதாக்கிக் கொள்ள முடியாது, ஆகையால் சோழர்கள் இலங்கைத் தீவுக்குள் புகுந்து அம்முடியை மீட்க போரிடுவார்கள். இலங்கைத் தீவை பாண்டிய நாடு சோழ நாட்டுக்குள் வரும் போது எல்லாம் தமது அதிகாரிகளை அனுப்பி நிர்வாகம் செய்ய சோழர்கள் முனைவார்கள். அப்படியான சோழ ஆக்கிரமிப்பை இலங்கைத் தீவு வாசிகள் விரும்புவதில்லை. இதனையே பிற்காலத்தில் தமிழ் ஆக்கிரமிப்பாக வரலாற்றில் மாற்றி எழுதிவிட்டனர்.

சிங்கள தேசியம் :

சிங்கள் தேசியம் என்ற ஒன்று பௌத்த மதத்தின் வருகைக்குப் பின்னரே உருவானது. எப்படி தமிழ் பேசும் சேர நாட்டவர் இன்று மலையாளத் தேசியமானார்களோ, அதே போல இலங்கைக்கு குடியேறிய தமிழர்களும், அவர்களின் இராச்சியமும் பிற்காலத்தில் தம்மை சிங்களவர் என அழைத்துக் கொண்டனர். பௌத்த வருகையும், கலிங்க நாட்டுத் தொடர்பும் வடநாட்டுக் கலாச்சாரம் மேன்மை என்னும் எண்ணத்தை அவர்களிடம் விதைத்தக் காரணத்தால் தம்மை வடநாட்டுக் குடிகள் என அறிவித்துக் கொண்டார்கள். இன்று ஆங்கில மோகம் இருப்பதைப் போலவும், தமிழர்களில் பலர் ஆங்கில உடை, மொழி மேன்மை எனக் கருதுவது போலவே சிங்களத் தீவின் மக்கள் அவ்வாறு கருதினார்கள். இந்தக் காலக்கட்டத்தில் தமிழகத்தின் இன்னொரு வரலாற்றுக் காரணமும் உண்டு. தமிழகம் முழுதும் களப்பிரர் ஆட்சியில் வந்து விட்டதால் தமிழகத்தில் இருந்து இலங்கை தனித்து இயங்க ஆரம்பித்தது. அடிமைப் பட்ட தமிழகத்தின் தொடர்புகளை விட்டுவிட்டு பௌத்த மதமும், வடநாட்டுக் கலாச்சாரத் தொடர்புகளாலும், தம்மை வடநாட்டவர் என அறிவித்துக் கொண்டனர். இப்படியான வடநாட்டு மேன்மைத் தனம் சிங்கள நாட்டில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முழுத் தீவும் சிங்கள பௌத்தமாகுதல் :

இலங்கை மற்றும் தமிழகம் இரண்டுமே பௌத்த மதம் ஓங்கிய களப்பிரர் காலத்தில் இலங்கைத் தீவும் முழுதுமே சிங்கள பௌத்த நாடாக மாறியது. குறிப்பாக எகிப்தியர்கள் தமது மொழி மதங்களை மறந்து இஸ்லாமிய அரேபியர்களாக மாறியதைப் போன்று தான் முழுத் தீவும் சிங்கள பௌத்தமாகி இருத்தல் வேண்டும். இக்காலக் கட்டத்தில் இலங்கைக்கும் தமிழகத்துக்கும் தொடர்புகள் குறைந்துப் போயிருத்தல் வேண்டும்.

வைதிக தமிழ் மறுமலர்ச்சி :

களப்பிரர்களை வென்று காஞ்சிபுரம் பகுதியில் பல்லவர்கள் தமது ஆதிக்கத்தைச் செலுத்திய கிபி 6ம் நூற்றாண்டில் தமிழகத்தில் பௌத்தம் அழிந்து வைணவம் எழுச்சிப் பெறத் தொடங்கியது. வைண எழுச்சியானது மக்களிடையே தமிழ் எழுச்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வந்தது. இருப்பினும் வடமொழி மேன்மைத் தனம் இங்கு ஒழிந்துவிடவில்லை. பல்லவர்கள் பலர் பிராமணர்களோடு தொடர்புக் கொண்டதால் அக்காலக் கட்டத்தில் வடமொழியே தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகவும் இருந்தது. ஆனால் பல்லவர்க் காலம் பொருளாதார, கலைகளில் தமிழ்நாட்டுக்கு ஒரு பொற்காலமாக அமைந்தது. அக்காலக் கட்டத்தில் வைணவ மதமும் மக்களிடையே பரவுதலுக்காக தமிழ் மொழியைப் பயன்படுத்தியது. இதனால் தமிழும் வளரத் தொடங்கியது. பல்லவர்களின் ஆதிக்கம் தென் கிழக்காசிய முழுதும் பரவிய போதும் இலங்கைத் தீவு முழுதும் பல்லவரின் கீழ் வரவில்லை. ஆனாலும் இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணப் பகுதியினை பல்லவர்கள் தமது வாணிகத் தொடர்புக்காக ஒரு தளமாகப் பயன்படுத்தினார்கள். அதே போல அரச தந்திர ரீதியாக சிங்களத் தீவில் குழப்பங்களை விளைவித்தார்கள். இதனால் சிங்கள தீவு பல்லவ நாட்டுக்கு எதிராக செயல் முடியாமல் இருக்கும் என்று எண்ணினார்கள்.

பல்லவர் - சிங்களம் :

பல்லவர்கள் வைணவ மதத்தினர் என்பதால் வைணவ மதத்தினை தென்னாடு முழுதும் அல்லாமல் மலாயம், சாவகம், கம்போடிய நாடுகளுக்கும் பரப்பினார்கள். அதே போல இலங்கையின் வடக்கு யாழ்ப்பகுதியை தமது வசமாக்கிக் கொண்டு அங்கும் தொண்டை நாட்டில் இருந்து மக்களைக் குடியேற்றினார்கள்.
ஏன் பல்லவர்கள் இலங்கை முழுதும் பரவ இல்லை என்பதற்கு காரணமாய் பார்த்தால் இலங்கை முழுதும் வைணவம் பரவாத நிலையே. இலங்கையிலே பழமையான ஒரே வைணவத் தலம் வல்லிபுரம் விஷ்ணு ஆலயம் ஒன்றே. அது மட்டுமின்றி வல்லிபுரமே வடக்கின் பழைமையான ஒரு நகராகவும் இருந்துள்ளது. அது மட்டுமின்றி யாழ்ப்பாண சரித்திரம் பேசும் பல கர்னபரம்பரைக் கதைகள் வீரராகவன் என்னும் யாழ்ப்பாடி யாழ்ப்பாண நகரை சிங்கள மன்னனிடம் இருந்து பெற்றதாகவும், அங்கு தொண்டை நாட்டில் இருந்து மக்களைக் குடியேற்றியதாகவும் கூறுகின்றது. இதனை முழுதும் பொய் என நம்மால் மறுக்க முடியாது.
மாறாக பல்லவர்கள் தமது வாணிபத்துக்காக இலங்கையின் யாழ்ப்பகுதியினை மட்டும் தம்வசமாக்கி அங்கு தமது குடியேற்றம் ஒன்றினை நிறுவி இருத்தல் வேண்டும். அது மட்டுமின்றி யாழ்ப்பாணத்தின் ஆரம்ப கால நில உரிமைகள் பெரும்பாலும் பிராமணர் வசமே இருந்துள்ளது. பல்லவர்கள் மூலமாகவே பிராமணர்கள் அங்கு குடியேறி இருத்தல் வேண்டும். அதே போல யாழ்ப்பாணப் பகுதியில் இருந்துக் கொண்டு சிங்கள மன்னர்களின் எழுச்சியைத் தடுத்து வந்திருக்கின்றார்கள். இன்னுமொரு ஆதாரம் யாழ்ப்பாணத்தில் இருக்கும் தொண்டைமானாறு என்னும் பகுதி. இது பல்லவர்களின் தொண்டை மண்டலத்தின் காரணப் பெயராக அமைந்திருக்கு. அது மட்டுமின்றி தொண்டை மண்டலத்தின் வடக்கே இருந்த தெலுங்கர்களும் யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் குடியேறி இருக்கின்றனர் என்பதை யாழ்ப்பாண வரலாறுக் கூறும் சில நூல்கள் தெரிவிக்கின்றன. வடமர், வடுகர் என்பது தெலுங்கரைச் சுட்டும் சொல்லாகும்.

மீண்டும் இலங்கையில் தமிழர் :

களப்பிரர் காலத்தில் முழுதும் சிங்கள மயமாகிப் போன இலங்கையில் பல்லவரின் எழுச்சியால் மீண்டும் தமிழர் குடியேற்றம் நடைப் பெறுகின்றது. அது மட்டுமின்றி யாழ்ப்பாண வடக்கு கரைகள் வாணிபத் தொடர்புகள் நடத்தும் பகுதியாக மாறியது. அதனால் சோனகர், யவனர், சாவகர், போன்ற வேற்று நாட்டு மக்களும் குடியேறினார்கள். இதேப் போக்க் நாகைப் பட்டினத்திலும் நடந்துள்ளது. அதே போல யாழ்ப்பாணத்தில் சிங்கள மயமாகி இருந்த மக்களும் தமிழ் மொழியையே மீண்டும் பேசலாயினர். கிட்டத்தட்ட யாழ்ப்பாணம் என்பது பல்லவரின் ஒரு குட்டிக் காலனியாக மாறியது.

சோழர்களின் வருகை :

பல்லவர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் சோழர்கள் தென்னாடு முழுதையும் ஆளத் தொடங்கினார்கள். இதனால் அக்கம் பக்கத்து நாடுகளை ஆதிக்கத்தில் வைத்திருக்க - அக்கம் பக்கம் நாடுகளில் கலவரங்களை உண்டு பண்ணினார்கள். ஏற்கனவே பல்லவர்களின் ஆதிக்கத்தில் இருந்த யாழ்ப்பாணம் சோழர்களின் ஆளுகைக்குள் வந்தது. அத்தோடு நிற்காமல் பாண்டியர்களுக்கு சிங்கள அரசுகள் உதவி செய்து வந்தமையால் சோழர்கள் சிங்கள நாட்டின் மீது படையெடுத்து யாழ்ப்பாணத்தின் இருந்து தமது பகுதிகளை விரிவாக்கி வட இலங்கை முழுதும் விரிவாக்கிக் கொண்டனர். சுமார் சில நூறு வருடங்கள் தொடர்ந்து சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தமையால் வடக்கு இலங்கை முழுதும் சோழர் நாட்டில் இருந்து குடியேற்றங்கள் நடந்தன. ஆனால் வடக்கு இலங்கையில் யாழ்ப்பாணம் தவிர்த்து பிற பகுதிகள் கடுமையான காடுகளாகவும், கொடிய விலங்குகள் இருந்தமையாலும், நீர் பற்றாக்குறை இருந்தத்தாலும் தமிழர்கள் பெரும்பாலான குடியேற்ற மேற்கொள்ள முடியவில்லை. பெரும்பாலான சோழர் காலத்து குடியேற்றங்கள் கடற்கரைப் பகுதிகளிலேயே இருந்தன. மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற கடல்பகுதிகளில் இருந்தன.
சிங்களவர் தமிழராதல், தமிழர் சிங்களவராதல் :
சோழர்களின் ஆட்சியில் வடக்கு இலங்கை மும்முடிக் கொண்ட சோழமண்டலம் என்றப் பெயரில் ஆட்சி செய்யப்பட்டது. அப்போது பல சிங்கள மக்கள் காலப்போக்கில் தமிழர்களாக மாற்றம் பெற்றனர். வடக்கு இலங்கையில் இருந்த பௌத்த மக்கள் முற்றிலுமாக சைவ மதத்துக்கு மாற்றாம் பெற்றனர். மாறாக ஜனநாத மங்கலம் எனப்படும் பகுதிகளில் குடியேறிய சோழ படைகள் அங்கேயே குடியேறினார்கள், பிற்காலத்தில் அப்பகுதி சிங்கள அரசின் கீழ் வந்தமையால் அவர்கள் சிங்களவராய் மாறினார்கள்.

பிற அரசுகள் :

சோழ அரசின் ஆட்சி முடிவுக்கு வந்த போது சாவகத்தில் இருந்து வந்த மன்னன் இலங்கையின் கிழக்கை பிடித்து ஆட்சி செலுத்தினான், ஆனால் சிங்கள அரசின் தாக்குதலால் மீண்டும் சேர நாட்டு கூலிப்படைகள் உதவியோடு வடக்கு இலங்கையை பிடித்து ஆட்சி செலுத்தினான். அங்கு ஏற்கனவே தமிழர்கள் அதிகளவில் இருந்தமையால் சிங்கள அரசுகளால் வடக்கு இலங்கையை மீண்டும் கைப்பற்ற முடியவில்லை.

கேரளர் வருகை :

இன்று ஈழத்தமிழர்கள் பலரும் மலையாளம் போன்றதொரு மொழி பேசுவதற்கும், அவர்களின் பழக்க வழக்கங்களில் கேரளாத் தனம் உள்ளமைக்கும் முக்கிய காரணம் சந்திரபானு என்னும் சாவக மன்னனுக்கு துணையாக வந்த கேரள கூலிப்படை வடக்கு இலங்கையில் குடியேறியமை தான். குறிப்பாக கேரள கூலிப்படைகள் தாம் வந்திருந்த ஊர்களின் பெயர்களை வடக்கு இலங்கையில் குடியேறிய ஊர்களுக்கு இட்டதும் அதற்கு சான்றாகும். கேரளர் அக்காலத்தில் முழுதாக மலையாள மொழியாக மாற்றமடையாத படியால் அவர்களின் மொழி ஆதி மலையாளமாய் இருந்தது. அவர்கள் வடக்கு இலங்கையில் குடியேறி ஏற்கனவே இருந்த தமிழ் பேசு மக்களோடு குடியேறி விட்டார்கள்.
கேரள ஊர்ப்பெயர்கள் - கோவளம், சங்கானை:
பிற்காலத் தமிழர்கள், தெலுங்கர்கள் பல்லவ நாட்டில் இருந்து வந்த போது தமது ஊர்ப்பெயர்களை வடக்கில் இட்டது போன்று, கேரளர்களும் தமது ஊர்ப்பெயர்களை வடக்கில் இட்டனர். அவற்றில் முக்கியமானதாக நான் கருதுவது கோவளம், சங்காணை என்னும் ஊர்ப்பெயர்கள்.
கோவளம் என்ற ஊர் இன்றளவும் தெற்கு கேரளத்தில் இருக்கின்றது. மற்றொன்று ஈழத்தமிழர்கள் மத்தியில் சங்காணை என்ற ஊர்ப்பெயர் ஆகும். சங்காணை என்றாலே அங்காடி என்ற அளவுக்கு ஈழத்தில் பிரபலமான ஊர். ஆனால் அவர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ சங்கானைச் சேரி என்னும் ஊர் கேரளத்தில் இன்றளவும் உண்டு, அந்த ஊர் கிரேக்க காலத்தில் இருந்து வாணிப்பத்துக்கு பெயர் போன ஊர். அதுவும் பெரிய அங்காடிகள் கொண்ட ஊராகும்.

மீண்டும் பாண்டியர் :

பிற்கால சோழர்களின் ஆட்சிக்குப் பின் பாண்டியரின் எழுச்சி தமிழ்நாட்டில் வருகின்றது. அதனால் அவர்கள் இலங்கையின் வடக்கை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருகின்றார்கள். இலங்கையின் வடக்கை நிர்வாகம் செய்ய இராமேஷ்வரம் பகுதியில் இருந்த பிராமணர்களை யாழ்ப்பாணப் பகுதிக்கு சிற்றரசுகள் ஆக்கினார்கள். பாண்டியரின் ஆட்சி முடிவுக்கு வந்த பின் யாழ்ப்பாணப் பிராமணர்கள் தம்மை தனியரசாக அறிவித்து யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகள் ( 1215 - 1619 ) என போர்த்துகேயரின் ஆட்சி இலங்கைக்கு வரும் வரை ஆண்டனர்.
இலங்கை வரலாற்றிலயே தமிழர்கள் தனியரசு நடத்தியது ஆரியச் சக்கரவர்த்திகள் தலைமையிலேயே ஆகும்.
மிகவும் நீண்டதொரு வரலாற்றை ஒரேப் பதிவில் இட்டுள்ளேன். குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் மக்களுக்கு இது இலங்கைக் குறித்து பெரும் விளக்கத்தைத் தந்திருக்கும்.

இப்பதிவின் சாரம்சமே -

1. இலங்கைத் தீவில் இருக்கும் பெரும்பாலானோர் தமிழ்நாட்டில் இருந்து குடியேறியவர்கள்.
2. மலையாளிகள் போன்று சிங்களவர்களும் தமிழர்களில் இருந்து பிரிந்து சென்ற தனி தேசியமாகும்
3. சிங்களவர்களில் ஒரு சில மன்னர்கள் தவிர்த்து ஏனைய அனைவரும் தென்னாட்டவரே ஆகும். வடநாட்டவர் இல்லை.
4. தமிழ்நாட்டின் களப்பிரர் காலத்தில் - இலங்கையின் முழுவதும் சிங்கள மயமாகி ( கிபி 3ம் நூற்றாண்டு முதல் கிபி 7 ம் நூற்றாண்டு வரை ) இருத்தல் வேண்டும்.
அதற்கான காரணங்கள் : சிங்கள ஊர்ப்பெயர்கள், சிங்கள- தமிழ் ஊர்ப்பெயர்கள் வடக்கில் கிழக்கில் காணப்படுவதே ஆகும்.
5. ஈழத்தமிழர்களில் வடக்கு யாழ்ப்பாணத்தமிழர்கள் ஒரே இனக் குழு மக்கள் இல்லை - அவர்கள் அனைவரும் பல்வேறு குடியேற்ற மக்களின் கலப்பினமே ஆகும். ( Immigrants of Jaffna colony ).
6. சிங்களவர்களின் ஆரிய வம்சாவளிக் கோட்பாடு தவறு. சிங்களவர்கள் ஆரியர் இல்லை என்பதை அவர்களின் உடை, பேச்சு, பண்பாடு மற்றும் நிறம், ஜெனிடிக்கு ஆகியவை நிருபித்துவிட்டன.
7. சிங்களவர் தமிழர் இரு தேசியமும் இனத்தால் ஒன்று தான். ஆனால் மொழியால் மட்டுமே இரு தேசியமாக இருக்கின்றார்கள். மொழிவாரி மாநிலம் பிரித்தமைப் போல இலங்கையும் மொழிவாரியான மாநிலமாக பிரித்தலே அவசியமானது.
எனதுப் பதிவில் தவறுகள் இருக்கலாம், இருந்தால் தயங்காது சுட்டிக் காட்டுங்கள். கடந்த 5 ஆண்டுகளாக நான் கற்று, பெற்று, ஆராய்ந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதியப் பதிவு இது இருப்பினும் தவறுகள் இருந்தால் தயங்காது கூறவும்.
இன்றையக் காலக்கட்டத்தில் தமிழர்கள், சிங்களவர்கள் ஆகிய இரு இனமும் தமது தொடர்புகளையும், உண்மையான வரலாறுகளையும் அறிதல் மிக அவசியம். தவறான வரலாறுகளால் எத்தனைப் பிரச்சனைகள் எழுகின்றன, எத்தனை உயிர்ப்பலிகள். சரியான புரிதல்களும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை மக்களிடம் வருவது அவசியாமன ஒன்று.

இந்தியா தமிழனின் நாடா?

இந்தியா தமிழனின் நாடா?
இதுநாள் வரையிலும் நானும் ஒரு இந்தியன் என்பதில் மிகுந்த பெருமை கொண்டிருந்தேன்.. இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்..இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம் என்று சிறுவயது பாடப்புத்தகங்களில் எழுதப் பட்டிருந்த வாசகங்களைப் புரியாத வயதில் படித்துப் புளகாங்கிதம் அடைந்திருக்கிறேன். இப்போது என் நிலையை மாற்றிக் கொள்ளும் அளவிற்கு கடந்த சிலவருடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னைக் கொதிக்கச் செய்கின்றன. இருந்தாலும் கையாலாகாத தமிழினத்தில் ஒரு மெல்லிய ஈனஸ்வரத்தோடு முனகுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத என் நிலையை எண்ணி வெம்பிக்கொண்டிருக்கின்றேன்.
இதனால் நான் இந்திய இறையாண்மையை மீறிவிட்டேன் என்றால் அது குறித்து எந்தக் கவலையும் எனக்கு இல்லை. ஏனெனில் இன்றைய இந்தியாவில் தனித்து விடப்பட்ட ஒரு தேசிய இனக்குழு எதுவென்றால் அது நம் தமிழினம்தான். துவேஷம் வளர்ப்பதில் எனக்கு எவ்வித உடன்பாடும் இல்லை..எனினும் சில விஷயங்களைப் பற்றி சற்று நிதானமாக சிந்தித்துப் பார்த்தால் கோபம் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை..
பீடிகைகள் போதும் நேராக விஷயத்திற்கு வருவோம்.
சில வாரங்களுக்கு முன்பு நான்கு தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர் .. நன்றாகக் கவனிக்கவும் "தமிழக மீனவர்கள் " என்று நான் குறிப்பிடக் காரணம்
நமது தேசிய ஊடகங்கள் அவ்வாறுதான் முன்பு குறிப்பிட்டன .. இறந்தது இந்திய மீனவனில்லையாம் தமிழ் மீனவனாம். ஆக துவேஷம் நம்மளவில் இல்லை.ஒட்டு மொத்த நாடே நம்மை ஒதுக்கியாயிற்று. மிக்க மகிழ்ச்சி.. ( வேறு வார்த்தைகள் தேடினால் கெட்டவார்த்தைகள் தான் தோன்றுகின்றன) சரி கொல்லப்பட்டதன் காரணம் ? இலங்கை அணி கிரிக்கெட்டில் இந்தியாவிடம் உலகக் கோப்பையை இழந்து விட்டதாம். இது நாளேடுகளில் வந்த செய்தி.இந்தக் காரணமானது எந்த அளவிற்கு நம்பகமானது என்பதில் சில ஐயங்கள் இருந்தாலும் , ராமநாதபுரம் கடல் எல்லையில் மீனவன் கொல்லப்பட்டால் அதன் காரணம் கண்டிப்பாக இலங்கை ஓநாய்ப் படையைத் தவிர யாராக இருக்க முடியும்.?

எதிரி நாடான பாகிஸ்தான் நம் நாட்டு மீனவர்கள் அவர்கள் எல்லைக்குள் சென்றால் கைது செய்து முறையாக நம் நாட்டிற்கே திருப்பி அனுப்புகிறார்கள். குறைந்தபட்சம் கொல்வதில்லை. இதற்காக நான் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும் ? அவன் ஒரு குஜராத்தி மீனவனோ அல்லது மராத்தி மீனவனோ தானே ? அவன் செத்தால் என்னவென்று நான் யோசித்ததில்லை.ஏனென்றால் நான் ஒரு இந்தியன் .
நான் மட்டும் ஏன் என்னை ஒரு இந்தியன் என்று நினைத்து இந்த நாறிப்போன தேசிய நீரோட்ட இறையாண்மை கருமாந்திரத்துக்குள் இணைத்துக் கொள்ளவேண்டும்?
கேனைத் தமிழர்களான நாம் ஒன்றை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும் ..
ஒரிசா மழை நிவாரணத்திற்கு அதிக நிதி கொடுத்தது தமிழன்
குஜராத் பூகம்பத்திற்கு அதிக நிதி கொடுத்தது தமிழன்
கார்கில் போர் இழப்பிற்காக அதிக நிதி கொடுத்தது தமிழன்
இப்படி இந்த இந்தியாவில் தலையிலிருந்து கால்வரை எந்தப் பகுதியில் ஒரு இயற்கைப் பேரிடரோ , போரோ ஏற்பட்டாலும் தனக்கு நிகழ்ந்ததாக எண்ணி கண்ணீர் வடிப்பவன் தமிழன்.
அதற்கு கைம்மாறாக இந்த ஒட்டு மொத்த இந்தியாவும் நம்மை ஒதுக்கிவிட்டது. ஊடகங்களிலிருந்து அரசியல் வரை தமிழன் ஒரு தீண்டத்தகாதவனாகவும் தமிழனுக்கு நேரும் துன்பம் கண்டால் எந்த எதிர்வினையும் காட்டாத நாடாக இந்தியாவும் மாறிவிட்டது.

நம் மீனவர்கள் கொல்லப்பட்ட விஷயத்திற்கு வருவோம். இந்த சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அன்னை சோனியா காந்தி , நமது முதுபெரும் இனமானத் (தற்போது ஈனமான) தமிழர் கருணாநிதியோடு இணைந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார். நமது மக்களுக்கு வாக்களித்தார் ..இனிமேல் கடலில் தமிழன் குருதி வீழாது என்று. சொல்லிச் சென்ற சிலதினங்களில் குருதி வாராமல் அடித்தே மூன்று பேரையும் முண்டமாக்கி ஒருவனையும் கொன்று அனுப்பின அரக்க வம்ச சிங்கள ஓநாய்கள். சில மாதங்களுக்கு முன்பு மண் (எழுத்துப் பிழை அல்ல ) மோகன் சிங் இனிமேல் தமிழன் மீது துப்பாக்கிச்சூடு இருக்காது என்று வாக்களித்தார். உடனே ஜெயக்குமார் என்ற மீனவனின் கழுத்தில் சுருக்கிட்டுக் கொன்று அனுப்பின அந்த ............. ( இரக்கமில்லாத அரக்கர்களை எவ்வாறு திட்டுவது) பயல்கள் .ஒவ்வொருமுறையும் தமிழக மீனவன் கொல்லப்படமாட்டான் என்று இவர்கள் வாக்களிக்கும்போதும், எவ்வாறு தமிழக மீனவனைக் கொல்வது என்னும் உத்தியை சிங்கள ............. பயல்களுக்கு இவர்களே சொல்லிக் கொடுப்பது போலுள்ளது.
இலங்கையில் இது போன்று தொடர்ந்த அடக்குமுறைகளினால்தான் LTTE இயக்கம் தோன்றியது . அதன்பின்பு இந்தியா தலையிட்டதும் ராஜீவ் காந்தியின் அமைதிப்படை அத்துமீறியதும் தொடர்ந்த துன்பியல் நிகழ்வுகளும் அதைத்தொடர்ந்து சோனியா அன்னை கொண்ட பழிவாங்கும் படலமும் ஒரு இனத்தையே வேரோடு அறுத்துக் கொண்டிருக்கின்றது. இத்தனை நாள் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது தவறு என்று மறுதலித்த நம் இந்திய அரசு இன்று சொந்த நாட்டுக்காரனையே பாதுகாக்க தவறி இருக்கின்றது.
2008 நவம்பர் 11 அன்று பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் ஆடிய வெறியாட்டத்திற்கு எந்த விதத்திலும் குறைவாகிவிடாது கடலில் சிங்கள ....... பயல்கள் ஆடும் கொலைவெறித் தாண்டவம்.எதிரி நாடு என்று சொல்லி அடித்ததனால் சற்றே கடினம் காட்டிய இந்திய அரசு , நட்பு நாடு என்று சொல்லி அடிக்கும் இலங்கையைக் கண்டு கொள்வதே இல்லை. ஏனெனில் அடிவாங்குவது தமிழன் தானே.
ஒற்றை படைவீரனைத் தாக்கியதற்காக பாலஸ்தீனம் மீது போர் தொடுத்த இஸ்ரேல் எங்கே? (இஸ்ரேல் ஒன்றும் உத்தமமான நாடு இல்லை. எனினும் தன் குடிமகனைக் காக்கும் அறவுணர்ச்சி பாராட்டப் பட வேண்டிய விஷயம்). சொந்த நாட்டு மக்கள் 500 பேரைக் காரணமின்றி கொன்ற சுண்டைக்காய் நாடு இலங்கையிடம் கண்டிப்பு காட்டாத இந்தியா எங்கே? ஒருகாலத்தில் CK நாயுடு கோப்பைக்காக தமிழக அணியுடன் கிரிக்கெட் விளையாடிய இலங்கை இன்று சீனா உதவியுடன் இந்தியாவின் காலைக் குத்திக் கொண்டிருக்கின்றது .
என்ன ஒரு முரண் பாருங்கள் ராஜபக்சே குருவாயூர் செல்கிறான் , திருப்பதி செல்கிறான் விட்டால் கருணாநிதி தோளில் கை போட்டுக்கொண்டு தஞ்சாவூர் வருவான்.. நமது நாட்டில் அவனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு வேறு ..! கொஞ்சமேனும் ஒரு குற்ற உணர்ச்சி இருந்தால் நம் அரசாங்கம் இப்படி செய்யுமா? இன்று ராஜபக்சேவால் இந்தியா தவிர எந்த நாட்டுக்குள்ளும் நுழைய முடியாது ஏனெனில் உண்மையிலேயே சொரணையுள்ள நம் ஈழத்தமிழர்கள் துரத்தி அடிப்பார்கள்.

ஆனால் கோழைத் தமிழனான நமக்கு ஒரு கவலையும் இல்லை . நமக்கு வேண்டியதெல்லாம் இம்முறை மிக்சி கிடைக்குமா , லேப்டாப் கிடைக்குமா என்ற கவலைதான்.
நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன் இனிமேல் இந்தியாவில் எந்த ஒரு பேரழிவோ , துயரோ நிகழ்ந்தாலும் ( நிகழக் கூடாது ) எந்த வகையான உதவியும் செய்யப் போவதில்லை .. என் இனம் சாகும்போது இந்தியாவில் எவனும் ஒரு மயிரையும் பிடுங்கவில்லை.. நானும் அவர்களுக்காக ஒரு மயிரையும் பிடுங்கப்போவதில்லை . வாழ்க தமிழினம் ( அட போங்கப்பா )..!

வியாழன், 21 ஏப்ரல், 2011

தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!


தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!
முன் அறிவிப்பு: இப் பதிவு பிடிக்காதவர்கள் தயவு செய்து இதனைப் படிக்க வேண்டாம். ஒரு ஈழத் தமிழனாக இருந்து, மனம் விட்டு மன்னிப்புக் கேட்டாலும் இந்தச் செயல்களை ஆற்றுப்படுத்த முடியாது என்ற காரணத்தினால் நான் எங்கள் இழி நிலைகளைப் பதிவாக்க முனைகின்றேன். ஈழத் தமிழன் எனும் அடையாளத்துடன் இப் பதிவினை எழுதுவதால், தமிழக உள்ளங்களிடமிருந்து எதிர்ப்பலைகள் கிளம்பலாம், ஆனாலும் பதிவில் நான் என் கருத்துக்கள் எதனையும் முன் வைக்காது, எங்கள் மக்களின் அனுபவ ரீதியான கருத்துக்களை மட்டுமே முன் வைக்கவுள்ளேன்!

உறவுகளே, இப் பதிவில் வரும் விடயங்கள் உங்களைக் காயப்படுத்தலாம், இவை தமிழக உறவுகள் மத்தியில் பல முரண்பாடுகளை உருவாக்கலாம். ஆனாலும் இப் பதிவில் வரும் விடயங்கள் உங்கள் மன எண்ணங்களைச் சிதைப்பதற்கானவை அல்ல. உங்களுடன் எங்களின் இழிவான குணங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே! ஈழத் தமிழர்களுக்கு இப்படியும் ஒரு குணம் இருக்கிறது என்பதனை அல்லது ஈழத் தமிழர்களின் மறுபக்கத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே இப் பதிவு.
ஈழத் தமிழர்கள் எனும் இனம் புவியியலாளர்களின் கூற்றுப் படி, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குமரிக் கண்டத்தில் ஏற்பட்ட பாரிய சுனாமித் தாக்கத்தின் காரணமாக இலங்கையில் குடியேறியவர்கள் அல்லது இலங்கைக்கு இடம் பெயர்ந்தவர்கள் என்பதனை யாரும் மறுத்துரைக்கவோ இல்லை மறக்கவோ முடியாது. எங்களின் எச்சங்கள், எங்களின் மரபணுக்கள் யாவும் தென் இந்தியாவிலிருந்தே தோற்றம் பெற்றிருந்தன.(இதனை விளக்கமாக ஈழத்தில் சாதியம்- பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம் எனும் பதிவில் கூறியிருக்கிறேன்)
இலங்கையில் வாழுகின்ற தமிழர் எனும் இனத்தினுள்
*ஈழத்தில் ஆரம்ப காலம் தொட்டு பூர்வீகமாக வாழும் தமிழர்கள்- இந்தியாவிலிருந்து முதன் முதலாக குடியேறியவர்கள்(தற்போது இலங்கையில் வாழும் தமிழர்கள்- வட கிழக்கு பூர்வீகத் தமிழர்கள்)
*மலையகத் தமிழர்கள்: ஆயிரத்து எண்ணூறுகளின் பிற் பகுதியில் இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களால் அழைத்து வரப் பட்டவர்களை மலையக மக்கள் என்று கூறுவார்கள். இவர்களே கொழும்புத் தமிழர் எனவும் அழைக்கப்படுகின்றார்கள்.
*தமிழைத் தாய் மொழியாகப் பேசுகின்ற இஸ்லாமியர்களும் உள்ளடங்குவார்கள்.
எங்களின் கடந்த காலங்களை, எங்களுக்கே உரிய தனித்துவமான எச்சங்களை, வேர்களினை, மூதாதையர்களை(முன்னோர்களை) மறந்து விட்டு, இலங்கைத் தமிழர்களில் பெரும் பாலானவர்கள் தாம் ஏதோ வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவர்கள் போலப் பாசாங்கு செய்வது வருந்தத்தக்க விடயமே. ’’தமிழக உறவுகளே, உங்களோடு சொந்தம் கொண்டாடும் போதும், பழகும் போதும், இந்த விடயங்களை மறைத்துப் பழக என் மனது இடம் கொடுக்க மறுக்கிறது.
இன்று கருணாநிதி எங்களைக் காப்பாற்றத் தவறி விட்டார், சோனிய எங்களுக்கு சொர்க்கத்தை திறந்து விட மறுத்து விட்டார் என சோகராகம் பாடும் நாங்கள் கடந்த காலங்களில் தமிழக உறவுகள் மீதான எங்களின் பார்வைகளினை மறத்தல் அல்லது மறந்து வாழ்தல் எவ் வகையில் நியாயமாகும்?
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தியேழுகளைத்(1987) தொடர்ந்து தான் இலங்கையின் விடயத்தில் இந்தியா துரோகம் இழைக்கத் தொடங்கியது, இந்தியா எங்களைக் காப்பாற்றவில்லையே, மத்திய அரசு எங்களை மதி கெட்டவர்களாக்கி விட்டது என்று பல்லவி பாடும் நாங்கள் இந்தக் காலங்களிற்கு முன்பதாக இழைத்த குற்றங்களைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்,
*ஆயிரத்து எண்ணூறுகளின் பின்னர்; இந்தியாவிலிருந்து இலங்கையின் மலை நாட்டிற்கு தேயிலைப் பயிர் செய்கைக்காக கொண்டு வரப்பட்ட மக்களை எவ்வாறு எங்களது ஆதிக்கவாதம் செருக்கு குணம் கொண்ட தமிழர்கள் இன்று வரை அழைக்கிறார்கள் தெரியுமா?
‘தோட்டக்காட்டார் அல்லது தோட்டக்காட்டான்.
இவ் இடத்தில் ஒரு கணம் நிற்க. இதே இந்தியாவிலிருந்து கையில் அகப்பட்ட பொருள்களோடு வியாபார நோக்கத்திற்காகத் தானே ஈழத்திற்கு எங்கள் மூதாதையர்கள் வந்து குடியேறி, இலங்கைத் தமிழர் எனும் அடையாளத்தை எம்மிடத்தே தந்து விட்டுச் சென்றார்கள். ஓ, நாமெல்லோரும் வரலாறுகளை மறந்து எமக்குப் பின்னே வந்த மலையக உறவுகளை எள்ளி நகை செய்கிறோம், கிண்டலடிக்கிறோம். ஏன் எங்கள் ஊர்களுக்கு அவர்கள் வந்தால் சரி நிகர் சமனாக உரையாட மறுக்கிறோம், எங்கள் ஊர்களிற்கு வரும் மலைய சகோதர்களில் ஒரு சிலரை குறத்தி, குறவன் எனப் பேசிக் கலைக்கிறோம். இது எங்களின் ஆதிக்க வாதமா? இல்லை ஏனையவரை அடிமை செய்யும் குணத்தின் அடையாளங்களா?
*இந்திய மத்திய அரசு தமிழர்கள் விடயத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தியேழுகளில் தவறிழைத்தது என்பது நிஜம். அது உண்மை, ஆனால் இந்தியா இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கூறும் நாங்கள்
காலாதி காலமாக சொல்லும் பழமொழி என்ன தெரியுமா?
‘’வாடைக் காற்றினை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பக் கூடாது’
(இலங்கைக்கு வட திசையில் எந்த நாட்டவர் இருக்கிறார் என்பதன் அடிப்படையில் இதனைப் பார்த்தால் நிறையப் பொருள் விளங்கும்)
இந்தப் மொழிக் கிண்டலோடு தானே எம்மூர்களிற்கு வரும் சகோதர்களோடு, எங்களின் சுயத்தை மறந்தவர்களாகப் பழகியிருக்கிறோம்.
எம் வம்சத்தினை, எங்களின் வேர்க் கொடிகளை, தொப்புள் கொடியினரை இழிழு படுத்தும் நாங்கள் எப்படி தமிழகமே எங்களைக் காப்பாற்று எனக் கூக்குரலிட முடியும்?
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தியேழாம் ஆண்டினைத் தொடர்ந்து எமக்கிருந்த இந்திய ஆதரவு சந்தர்ப்ப சூழ் நிலைகளால், அதுவும், இந்திய இராணுவம் இலங்கையில் செய்த சதி, இந்திய மத்திய அரசினது நடவடிக்கைகள், இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா முதலியோரது நடவடிக்கைகளால் சீர் குலைந்தது என்பதை இவ் இடத்தில் நிலை நிறுத்தி ஒரு வினாவினை முன் வைக்கிறேன்.
அந்தக் காலம் முதல் இந்திய அரசிடம் பகிரங்கமாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மன்னிப்புக் கோரும் வரை(2002ம் ஆண்டு வரை) ‘இந்தியாவின் துணையின்றி தனித்தே வெல்லுவோம்’ எனப் பல்லவி பாடிய நாங்கள் வன்னிப் பகுதி மீதான இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்ட பின்னர் இந்தியா இன்றி ஈழத்தில் ஒரு துரும்பினையும் அசைக்க முடியாது எனக் கூறி கெஞ்சி, மன்றாடியது எவ் வகையில் நியாயமாகும்?
கலைஞர் தங்களைக் காப்பாற்றவில்லையே, கருணாநிதி தமிழர்களுக்குத் துரோகம் செய்து விட்டார் எனக் கூறும் நாமெல்லோரும்; இருபத்திரண்டு தமிழ் மந்திரிகளைப் பாராளுமன்றம் அனுப்பியவர்கள் தானே?
அந்த இருபத்திரண்டு பேரில் யாராவது ஒருவராவது மலையகத் தமிழர்களுக்காக மனம் திறது சுய நலமற்றுப் பேசினார்கள் என்று நிரூபிக்க முடியுமா? ஆனால் ஈழத் தமிழர்களுக்காக இன்று வரை தன்னால் இயன்ற வரை குரல் கொடுக்கும் மனோ கணேசனை யாவரும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
ஈழ யுத்தம் தொடங்க முன்பதாக மலையக மக்களின் சம்பள உயர்வு கோரிய போராட்டங்கள், தொழிற்சங்கப் போராட்டங்கள், 1977ம் ஆண்டு போராட்டம் முதலிய பல சம்பவங்கள் இடம் பெறுகையில் ஒரே நாட்டினுள் இருந்தும் கை கட்டி வாய் பொத்தி நின்று வேடிக்கை பார்த்து விட்டு,
வன்னியில் எங்கள் தலைக்கு மேல் அவலம் வந்த வேளையில் மட்டும் எந்த முகத்தைக் கொண்டு ‘கலைஞர் ஐயா காப்பாற்றுங்கோ’ எனக் கேட்க மனம் வந்தது?
சமாதான காலத்தில் ஈழத்திற்கு தமிழகத்திலிருந்து வியாபார நோக்கோடு வந்திருந்த (2002ம் ஆண்டின் பின்னர்) ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை முதலிய பல தமிழக ஊர்களைச் சேர்ந்த புடவை வியாபாரிகளை ‘இவர்கள் இந்திய உளவுத் துறையான ‘ராவின்(Raw) உளவாளிகள்’ எனக் கூறி பட்டப் பகலில் வீதியில் வைத்து அடித்து விரட்டிய நாங்கள் எந்த முகத்தினை வைத்துக் கொண்டு ‘தமிழகமே எங்களை மன்னித்து, மோட்சம் அளி’ எனக் கதற முடியும்?
மேற் கூறப்பட்டுள்ள என் மனக் கருத்துக்களோடும், வினாக்களோடும் இந்த விவாத மேடை உங்களுக்காய் விரிகிறது.
இப் பதிவு தொடர்பான உங்களது கருத்துக்களை, விவாதங்களை, எதிர்க் கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

அடங்காத காளை ஒண்ணு அடிமாடானது!



"என்ன மோகன் என்னைக்கு வந்தீங்க இந்தியாவுக்கு? என்று விசாரித்தார் அவனுடைய பி எஸ் ஸி க்ளாஸ்மேட் ராஜாராம்.



"நேற்றுத்தான்" என்றான் கனிவாக.



"மனைவி, மகன் எல்லாம் வரலையா?"



"இல்லை" என்று அதோட முடித்துவிட்டான்.



மோகனுக்கும் அவன் மனைவி வித்யாவுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அவன் மகன், விக்ரம், அம்மாவுடன் போய்விட்டான். அவனுக்கு 17 வயது ஆகிறது. ஹைஸ்கூல் முடித்துவிட்டான். கடந்த ஒரு ஆண்டு சில மாதங்களாக வாழ்க்கையை அவனுக்காக தனியாக வாழ்ந்து கொண்டிருந்தான் மோகன்.



மோகன் ஒரு நாள் உட்கார்ந்து தன் வாழ்க்கையைப்பற்றி யோசித்தான். கடந்த 50 வருட வாழ்க்கையில் எப்போ அவனுக்கு சுதந்திரம் இருந்தது? பள்ளியில் சந்தோஷமாக இருந்தான், பிறகு, கல்லூரியில். ஆனால் கல்யாணம் ஆனதிலிருந்து அவனுடைய ஒவ்வொரு சுதந்திரமும் பறிபோனது. புகை பிடிப்பதை நிறுத்தினான், குடிப்பதை நிறுத்தினான், நல்ல நண்பர்களையும் குறைத்தான். மனைவி, குழந்தை, குடும்பம், இதுதான் வாழ்க்கை என்று போனது. ஒரு சினிமா பார்ப்பதில்லை, ஒரு டிவி ஷோகூட பார்க்க முடியவில்லை. எதுவுமே அவனுக்கென்று செய்ய முடியவில்லை! தான் சம்பாரித்த பணமெல்லாம் அவன் மனைவியும் மகனும் இஷ்டத்துக்கு செலவு செய்தார்கள். வர வர வீட்டில் அவன் ஒரு ட்ரைவர் போல ஆனான். அவன் குரலுக்கு எந்த மதிப்பும் அந்த வீட்டில் இல்லை. வீட்டில் அதிகமாக சம்பாரிப்பது அவன். குறைய தனக்கென்று செலவழிப்பதும் அவன் தான். தன் மகன் படிப்புக்காக எல்லா பணத்தையும் செலவழித்தான், சேமிப்பில் போட்டு வைத்தான். தனக்கு என்று ஓய்வு காலத்தில் வாழக்கூட போதுமான பணம் போட்டு வைக்கவில்லை அவன். பிச்சை எடுக்க வேண்டியதுதான் வயதான காலத்தில்.



எதுக்காக சம்பாரிக்கிறோம்? யாருக்காக வாழ்கிறோம்? என்ன வாழ்க்கை? என்கிற விரக்தி வந்தது அவனுக்கு. மகன், மனைவி என்பதே சொந்தம்போல் தோனவில்லை அவனுக்கு. மேலும் இந்த தன் குடும்ப வாழ்க்கையால் அவனால் தன்னை பெற்ற தாய் தந்தையர்களுக்கும் தைரியமாக உதவ முடியவில்லை. போய் நிம்மதியாக அவர்களிடம் பேச முடியவில்லை, ஆறுதல் சொல்ல முடியவில்லை. இந்தியா வரும்போதுகூட மனைவி ராஜியம்தான்! மகன் மனைவி சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு இருந்தான் . அப்போதுதானே ஒரு நல்ல குடும்பத்தலைவன் என்று சொல்வார்கள்? என்னதான் அவன் குடும்பத்திற்காக தியாகம் செய்தாலும் அவனை அவன் மனைவி ஆயிரம் குறை சொல்லத் தயங்கவில்லை.



யோசிக்க யோசிக்க இப்படி வாழ்வதற்கு பேசாமல் போய் சேர்ந்தால் என்ன? என்று தோன்றியது மோகனுக்கு.



தன் அம்மா அப்பாவுக்கு எதுவும் செய்யனும் என்றால் பயந்துகொண்டு செய்யும் நிலைமை போல் ஆனது. அதை அடியோடு வெறுத்தான் மோகன். எல்லாமே ஏதோ போலி வாழ்க்கைபோல வாழ்க்கை தோன்றியது. வாழ்க்கையில் எந்த விதமான இனிப்பும் இல்லை அவனுக்கு.



அமெரிக்காவில் பிறந்த அவன் மகனோ, தான் வெறுத்த அமெரிக்க கலாச்சாரத்தின் மொத்த முழு உருவமாக இருந்தான். தன் மகனிடம் உள்ள இதே குணங்களை அமெரிகர்களிடம் பார்த்து வெறுத்து இருக்கிறான். இன்று அதேபோல் தான் இருக்கிறான் அவன் மகன். அப்போ அவன் மகனையும் அதே அளவு தான் வெறுக்கனுமா என்ற கேள்வி வந்தது மோகனுக்கு? ஆக மொத்ததில் நன்றிகெட்ட மனைவி! நன்றினா என்னனு கேட்கிற மகன். இவன் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் குடும்பத்தலைவன்!



ஒரு நாள் புதிதாக லைசெண்ஸ் வாங்கிய அவன் மகன் விக்ரம், எப்போதும்போல அது இல்லை, இது இல்லை, என்பதுடன் எனக்கு புது Sports car வேணும் என்றான். அதன் விலை $30,000.



"நீ சம்பாரிதித்து வாங்கு! என்னால் அவ்வளவு பணம் உனக்கு செலவழிக்க முடியாது!" என்றான் மோகன்.



"ஏன் நீங்க வாங்கி தந்தால் என்ன?" என்றாள் வீட்டில் ராஜியம் நடத்தும் மனைவி வழக்கம்போல. அவள் எதிலும் தோல்வியே அடைந்ததில்லை.



"அப்போ நீ சம்பாரித்து வாங்கிக்கொடு" என்றான்.



"என்ன சொல்றீங்க?!" என்றாள் எரிச்சலுடன்.



"நான் தமிழ்லதானே சொன்னேன்?" என்றான் மோகன்.



"அப்போ அவனுக்கு கார் வேண்டியதில்லையா?. நீங்க வாங்கி கொடுக்க போவதில்லையா?"



"ஒரு புது ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிக்கொடுக்க என்னிடம் பணம் இல்லை. அது தேவையும் இல்லை. ஒரு பழைய கார் $2000 வாங்கி இப்போதைக்கு ஓட்டட்டும். அவன் சம்பாரிக்கும்போது அவன் காசு போட்டு பின்னால் ஒரு லெக்ஸஸ், இல்லைனா ஒரு மெர்சிடெஸ் கன்வேர்ட்டிபிள் வாங்கிக்கொள்ளட்டும்" என்றான் மோகன்.



அவன் சொல்வதையெல்லாம் அந்த வீட்டில் யாரும் மதிப்பதில்லை! வழக்கம்போல அவன் மனைவி மோகன் சொல்வதை கேட்காமல் மகனுடன் கார் டீலரிடம் சென்றாள். அந்த நேரத்தில் மோகன் ஒரு லாயரைப்போய் பார்த்தான். ஆனால் இந்த முறை வெற்றி கிடையாது என்பது தெரியாது பாவம் அவளுக்கு.



புது காருடன் மனைவியும் அவன் மகனும் வரும்போது, டைவோர்ஸ் நோட்டிஸை அவன் மனைவியிடம் கொடுத்தான், மோகன்.



"எனக்கு இந்த கார் வேணாம் அப்பா" என்றான் மகன்.



"I am really tired of my family. I want to live alone for a while" என்றான் மோகன் நிதானமாக.



அவன் மனைவி அழுதாள், சாவேன் என்றாள். அது இதுனு பேசினாள். அதற்கெல்லாம் மோகன் இந்தமுறை மசியவில்லை. டைவோர்ஸ் பண்ணி முடித்துவிட்டான் குடும்ப வாழ்க்கையை.



நல்ல ஏரியாவில் அரை மில்லியன் மதிப்புள்ள வீட்டை மனைவி மற்றும் மகனுக்கு கொடுத்துவிட்டு, தனி அப்பார்ட்மெண்ட் ல ரொம்ப மோசமான ஏரியாவில் குறைந்த செலவில் வாழ்ந்தான் விவாகரத்துக்குப் பிறகு, ஆனால் நிம்மதியாக!



ஒரு சில நண்பர்கள், டி வி, வேலை என்று பொழுது போனது. அவனுக்காக மட்டும் வாழ்ந்தான் மோகன். குடுமபத்திற்கு போதுமான அளவு தியாகம் செய்தாகிவிட்டது! வேலையில் அதிக நேரம் செலவழித்து ப்ரமோஷன் கிடைத்தது. தான் சம்பாரிக்கும் பணத்தில் பாதி மனைவி குழந்தைக்குப்போனாலும், மீதி இருப்பதே பெரிய தொகையாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அவனுக்கு மன நிம்மதி இருந்தது. எல்லா முடிவும் அவனே எடுக்க முடிந்தது. தன் தவறுக்கு தான் பொறுப்பேற்க அவன் என்றுமே தயங்கியது இல்லை!



இப்போ இந்தியா வர ஒரு மாதம் அவனுக்கு லீவ் கிடைத்தது. வசதி என்ன என்றால், மனைவிக்கு லீவ் இருக்கா, மகனுக்கு லீவ் இருக்கா என்பதை பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தியா வந்தான், தன் ஊருக்கு வந்தான், வந்து அவன் வயதான அம்மா அப்பாவிடம் நிறைய விசயங்கள் பேசினான், நிறைய நேரம் செலவழித்தான். அவர்களுடன் செலவழிக்கும் இந்த நேரம் மிகவும் அர்த்தமானதாக இருந்தது. பழைய நண்பர்களை பார்த்தான். தான் படித்த பள்ளி, போய் வந்த இடங்களுக்கு சென்று வந்தான்.



கடந்த 30 வருடமாக அவனுக்கு இந்த சுதந்திரம் பறிபோய் இருந்தது. அவனுக்கு இந்த வாழ்க்கை ரொம்பவே பிடித்தது. மனைவி குழந்தை என்று தியாகியாக வாழ்ந்து, என்னதான் செய்தாலும் கடசியில் கெட்ட பெயரு வாங்கி கட்டிக்கொள்வதைவிட இது அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருந்தது அவனுக்கு.